யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் நூற்றாண்டு நிறைவு விழா

30 டிசம்பர், 2016

அன்புக்குரியவர்களே,

நமது பேரன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா நிறுவப்பட்டதை நினைவு கூரும் வண்ணம் இந்த நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் ஒன்றாகக் கொண்டாடி மகிழும்போது என் மனம், களிப்புறுகிறது. நான் உங்கள் அனவருக்கும் அன்பான வாழ்த்துக்களையும் இறை அருளாசிகளையும் அனுப்புகிறேன்; மேலும் நான், நமது மரியாதைக்குரிய குருதேவரையும், அவரது பணி இந்தியாவிற்கும் இந்த உலகிற்கும் ஆற்றியுள்ள சேவையையெல்லாம் மேன்மைப் படுத்துவதற்காக நீங்கள் மிகுந்த பாசத்துடனும் கவனத்துடனும் திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ள பல அழகிய நிகழ்வுகளையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு ஆத்மார்த்தமாக உங்களுடன் அவற்றில் இணைந்து கொள்வேன். குருதேவரின் யோகதா சத்சங்க சொஸைடி எவ்வாறு திஹிகாவில் ஒரு சிறிய “எப்படி வாழ வேண்டும்” வகைப் பள்ளியிலிருந்து, விசாலமான ஆசிரமங்கள், உயிர்த்துடிப்புள்ள மற்றும் வளர்ந்து கொண்டிருக்கும் சன்னியாசப் பரம்பரை, இந்தியா முழுவதும் இருநூறுக்கும் மேற்பட்ட தியான மையங்கள் அத்துடன் அநேக கல்வி நிறுவனங்கள் மற்றும் அறப்பணிகள் ஆகியவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு நிறுவனமாக வளர்ந்திருப்பதை நான் எண்ணிப் பார்க்கும் போது, நான் குருதேவரின் மாபெரும் ஆனந்தத்தை உணர்கிறேன். மிக்க மகிழ்ச்சியான இந்த நிறைவு விழா தருணத்தில் அவர் தனது தெய்வீக அன்பு மற்றும் அருளாசிகளை அனைத்து பக்தர்களுக்கும் – உண்மையில் இந்தியா முழுவதற்கும், பொழிந்து கொண்டிருக்கிறார் மற்றும் இந்த வளர்ச்சிக்கு எவரது முயற்சிகளெல்லாம் பங்களித்துள்ளனவோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரது எல்லையற்ற ஆன்ம – பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஒய் எஸ் எஸ்-ஸின் எளிய தொடக்கத்திலிருந்து, இந்த நூறு வருடங்களில், இந்தியா மற்றும் மேலைநாடுகளில் நமது குருதேவர், தெய்வீக அன்பின் ஓர் உண்மையான அவதாரம் மற்றும் உலகத்தை மாற்றும் பணிக்காக அவதரித்த ஓர் சகாப்தம் படைக்கும் ஜகத்குருவென்றும் அங்கீகரிக்கப் பட்டுள்ளார். புனித விஞ்ஞானத்தைப் பரப்புதல் அத்துடன் நமது ஆன்ம முன்னேற்றத்தையும், மனித இனத்தின் மேல் நோக்கிய வளர்ச்சியையும் விரைவுபடுத்துவதற்காக, நவீனயுகத்திற்கு, ஒரு விஷேச சமய அமைப்பை நிறுவுதல் ஆகியவை அவருக்கு இறைவனால் கட்டளையிடப்பட்ட பணியாக இருந்தன. அவரது முதல் “எப்படி வாழ வேண்டும்” வகைப்பள்ளி நிறுவப்பட்ட மூன்று வருடங்களுக்குப்பின் ராஞ்சியில், அவர் அமெரிக்காவிற்குச் சென்று இந்த அதிமுக்கியமானப் பணியை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதைத் தெரிவிக்கும் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். அதன்பிறகு அவர் மேற்கிலேயே வாழ்வதற்கு விதிக்கப்பட்டாலும், அவரது அனைத்தையும் உள்ளடக்கும் உணர்வுநிலை மற்றும் உள்ளத்தில் இந்தியா எப்பொழுதும் இடம் பெற்றிருந்தது. என் இந்தியா எனும் தன் கவிதையில் அவர் எழுதினார்,” நான் இந்தியாவை நேசிக்கிறேன், ஏனென்றால் அங்குதான் முதன்முதலாக இறைவனையும் மற்றும் அனைத்து நல்ல விஷங்களையும் நேசிக்கக் கற்றுக் கொண்டேன்.” இந்தியாவில் அவர்தன் பணியைத் தொடங்கினார், மேலும் தன் தாயகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வார்த்தைகளுடன் தன் உடலை நீத்தார் – அவரது ஆன்மா மற்றும் இந்தியாவால் எழுச்சியூட்டப்பட்ட பணி என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

மேற்கில் தன் பணியை நிலைநாட்டுவதில் எண்ணற்ற பொறுப்புகள் இருந்த போதிலும் இந்தியாவிலுள்ள ஒய் எஸ் எஸ் மற்றும் தன் சீடர்களின் நலம் பற்றிய அன்பான அக்கறை அவரிடம் மாறாமல் இருந்தது. 1935-36-ல் இறைவன் அவர் இந்தியாவிற்குத் திரும்ப ஒரு வாய்ப்பு அளித்ததும், அவர் நாடு முழுவதும் உரையாற்றி, ஒய் எஸ் எஸ் – ன் எதிர்காலத்திற்கு நிதியுதவியும் பாதுகாப்பும் அளிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். அநேக தடவைகள், இந்தியாவிற்கு மீண்டும் விஜயம் செய்வதற்கான தன் நம்பிக்கையைப்பற்றி அவர் பேசக் கேட்டுள்ளேன். ஆனால், தன் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் தெய்வத் திருவன்னையின் விருப்பம் அதுவல்ல என்று உணர்ந்தபோது, அவர் ஶ்ரீ ஶ்ரீ தாயாமாதா அவர்களிடம், இந்தியாவிலுள்ள தன் பணியை தான் எவ்வாறு நிறைவேற்றியிருப்பாரோ அவ்வாறு நிறைவேற்றும் பொறுப்பினை ஒப்படைத்தார். தன் முழு இதயத்துடன் ஶ்ரீ தாயா மாதா அந்த புனித நம்பிக்கையை நிறைவேற்றி, பக்தர்களுக்கு உண்மையிலேயே பேரன்புமிக்க தெய்வத் திருவன்னையின் பிரதிபலிப்பாகமாறி, குருதேவரின் உணர்வுநிலையுடனான தனது முழு இணக்கம் வாயிலாக அவர்களுக்கு எழுச்சியூட்டினார். அந்த உயர்தளத்திலிருந்து தான் அவர் ஒய் எஸ் எஸ் பணியை, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, குருதேவரின் இலட்சியங்கள் மற்றும் விருப்பங்களுக்கு முற்றிலும் இணங்க வழிநடத்தி, இன்று நாம் பார்க்கும் சொஸைடியின் வளர்ச்சிக்கு ஊட்டமளித்தார். ஹன்சா சுவாமி சியாமானந்தரால் ஶ்ரீ தயாமாதாவிற்கு அளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற உதவி மற்றும் ஆதரவிற்கும், மற்றும் அநேக பிற ஒய் எஸ் எஸ் பக்தர்களுடைய ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டவர்கள். சியாமானந்தரின் அர்ப்பணிப்பு, தயாமாதாவின் முயற்சிகளுக்கு முக்கிய பங்கு ஆற்றியது. ஆதரவளித்த பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாய் இருப்பதால் அவர்கள் எங்கள் இதயங்களில் குடிகொண்டுள்ளார்கள்.

தயா மாதாவின் பல இந்தியப் பயணங்களின் போது, அவருடன் சேர்ந்து சென்றது எனது பாக்கியம். நாங்கள் சந்தித்த ஒய் எஸ் எஸ் பக்தர்களிடம் பிரதிபலித்த, இந்தியாவின் சிறப்புப் பாரம்பரியமான, இறைவன் மீதான தூய்மையான மனமார்ந்த பக்தியை தயாமாதா போற்றியது போல் நானும் போற்றினேன். குருதேவரின் தாயகத்திற்குச் சென்ற அந்த விஜயங்களும், பிற்காலப் பயணங்களும் என்மனத்திலும் இதயத்திலும் பொறிக்கப்பட்டுள்ள எனது நீங்காத நினைவுகளில் இடம் பொற்றுள்ளன. நான் அடிக்கடி அந்நினைவுகளில் ஆழ்கிறேன், அங்குள்ள குருதேவரின் சீடர்களுக்காகவும், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் பணிக்காகவும் மற்றும் அப்பணியை முன்னெடுத்துச் செல்ல மிகுந்த சேவை செய்யும் அனைவருக்காகவும் எனது மிக ஆழ்ந்த பிரார்த்தனைகளை அனுப்பாமல், ஒரு நாளும் கழிந்ததில்லை. ஒய் எஸ் எஸ் செயல்பாடுகள் குறித்தப் புகைப்படங்களை பார்க்கும் போது, குருதேவரது போதனைகளை பயிற்சி செய்வதில் மிகவும் ஆழ்ந்து செல்ல உற்சாகமாக உள்ள, திரளான அந்த அழகிய ஆன்மாக்களை தியானம் புரிந்து ஞானத்தைப் பெறுவதற்கும் எண்ணற்ற வழிகளில் குருதேவரின் பணிக்கு மகிழ்ச்சியாக சேவை புரிவதற்கு தவறாமல் ஒன்று கூடும் அவர்களைக் கண்டு நான் சிலிர்ப்புறுகிறேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த பக்தர்கள் குழு இன்று இறைவன் மற்றும் அவனது அன்பில் இணைந்துள்ள மாபெரும் ஆன்மீகக் குடும்பமாக மாறியுள்ளது.

குருதேவர் எங்கள் மத்தியில் நடமாடிய நாட்களில் இருந்தது போல் தன் சீடர்களின் நலன்களிலும், முன்னேற்றத்திலும் இன்றும் அக்கறையுடனுள்ளார். நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு சிரத்தையுடன் அவரது தியான உத்திகளைப்பயிற்சி செய்தல் மற்றும் தெய்வீக அன்னையை மகிழ்விப்பதற்காக உங்கள் வாழ்க்கைகளை வாழ்தல் ஆகியவற்றின் வாயிலாக முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை பார்ப்பதுதான் குருதேவருக்கு மிகுந்த உவகையை அளிக்கிறது. நீங்கள் ஆன்மீக ஞானத்தில் வளர்ந்து, ஓர் என்றும் ஆழ்ந்த, மற்றும் இனிமையான இறைவனுடனான அக உறவை ஏற்படுத்திக் கொள்வதை பார்க்கும் பொழுது குருதேவர் களிப்புறுகிறார், ஏனென்றால் அவர் உங்களுக்கு மிக உயர்ந்ததையே விழைகிறார். நீங்கள் அவருக்குச் செலுத்தக்கூடிய ஒப்பற்ற அஞ்சலியானது, நூறு வருடங்களுக்கு முன் எந்த இறை அன்பு மற்றும் சேவை எனும் தெய்வீக இலட்சியங்களின் அடிப்படையில் இந்தப் பணியை நிறுவினாரோ, அவற்றின் உயரிய எடுத்துக்காட்டுகளாகத் திகழும் சாதகராக நீங்கள் மாறுவதுதான்.

பரமஹம்ஸரது செய்தியினால் பலரது வாழ்க்கைகள் தாக்கமுறப்பட்டுள்ளன, ஏனெனில் ஆன்மாவின் ஒன்றிணைக்கும் மொழியில், தெய்வீக அன்பு மற்றும் சாசுவத உண்மையின் மொழியில், அவர் பேசுகிறார். அவரது போதனைகள் மற்றும் இறைவனுக்கான அவரது உயரிய அன்பு எனும் காந்தம், அனைத்துக் கலாச்சார, இன, தேசிய மற்றும் சமய ரீதியான பேதங்களின் எல்லைகளுக்கு அப்பால் கடந்து செல்கின்றன. ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் பின் தாக்கமானது, முதலில் மென்மையான இளங்காற்றாகத் தோன்றி படிப்படியாக அது, இறைவனது குழந்தைகளின் வாழ்விலிருந்து இருளை அகற்ற உதவிபுரியும் ஒரு வலிமைமிக்க காற்றாக மாறும் என்று குருதேவர் எங்களிடம் கூறினார். இந்த நூற்றாண்டு நிறைவின் போது நாம் நன்மைக்கான இந்த சக்தியின் தொடக்கத்தை மட்டுமின்றி அதன் அதிகரிப்பையும் கொண்டாடுகிறோம்; நம்முன் உள்ள நூற்றாண்டு காலத்தில் அதன் ஆன்மீகமாக்கும் தாக்கங்கள் இன்றும் கூடுதல் விசையைப் பெற விதிக்கப்பட்டுள்ளன. குருதேவர் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் நிறுவனத்தை, தனது இலட்சியமான கிழக்கு மற்றும் மேற்கின் ஒற்றுமைக்கு உருக்கொடுப்பதற்கும் மற்றும், அவரது அன்பு மற்றும் ஞானத்தின் ஒரு சாசுவத தூய சாதனமாகத் திகழ்வதற்கும், நிறுவினார். அந்தப் புனித மரபுரிமைச் செல்வத்தைச் சார்ந்து உங்கள் வாழ்க்கைகளை அமைத்து கொண்டிருக்கும் உங்கள் அனைவரின் முயற்சிகளை அவர் ஆசிர்வதிக்க நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் உங்கள் முகங்களில் பார்த்துள்ள, அந்த முயற்சிகள் கொணரும் அக மாற்றம் மற்றும் ஆனந்தமிக்க உற்சாகம் இந்த தெய்வீகப் போதனைகளின் என்றும் வளரும் சக்திக்கு மிகப்பெரிய சான்றாகும்; மற்றும் அது குருதேவரது பணிக்கு வரவிருக்கும் வருடங்களில் புத்துணர்ச்சி யூட்டுவதைத் தொடரும். ஜெய் குரு!

இறைவன் மற்றும் குருதேவரின் இடைவிடாத அருளாசிகளுடன்,

ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா

இதைப் பகிர