நன்றி செலுத்துதலையும் நன்றியுணர்வையும் பயிற்சி செய்வது குறித்து பரமஹம்ஸ யோகானந்தர்

22 நவம்பர், 2023

பயோ-3326

நன்றி நவில்தலும், போற்றுதலும் உங்கள் உணர்வு நிலையில் ஆன்மீக வளர்ச்சியும் வளமும் உங்களை அடையக்கூடிய பாதையைத் திறக்கின்றன. தான் பாய்ந்தோடுவதற்கான ஒரு பாதை திறக்கப்பட்ட உடனேயே, பரம்பொருள், காணக்கூடிய ஒரு புறத்தோற்றமாகத் தன்னை வெளிப்படுத்தி கொள்கிறது. நீங்கள் எல்லாக் காலங்களிலும் எல்லாவற்றிற்கும் நன்றியுடன் இருக்க வேண்டும். சிந்திக்க, பேச, மற்றும் செயாலாற்றுவதற்கான அனைத்து ஆற்றலும் இறைவனிடமிருந்தே வருகின்றன. மேலும் அவன் இப்பொழுதும் உங்களுடனேயே இருந்து கொண்டு, உங்களை வழி நடத்தி, ஊக்குவித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கண்களைத் திறந்து தற்சமயம் உங்களிடம் உள்ள நல்லதைப் பாருங்கள், பின்னர் உங்களில் வரும் ஒவ்வொரு புதிய வெளிப்பாட்டையும் அடையாளம் காண விழிப்புடனும் உயிர்ப்புடனும் இருங்கள். இறைவனிடம் பக்தியுடன் பேசுங்கள், வாழ்க்கையின் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் எப்போதும் உங்களுடன் இருக்கிறான், உள்ளார்ந்து இருக்கும் இறை சக்தியை நீங்கள் உணர்ந்து கொண்டால் வெற்றியை எதுவும் தடுக்க முடியாது.

நம்முடைய நன்றி எவ்வளவு உளமார்ந்ததாக இருந்தாலும், எல்லாம் நிறைந்த இறைவனுக்கு, அது தேவை இல்லை. ஆனால் நாம் இறைவனிடம் நன்றியுடன் உள்ள பொழுது, நமது கவனமானது, நம்முடைய உயர்ந்த நன்மைக்காகவே அனைத்தையும் அளிக்கும் அந்த மகத்தான மூலமாகிய இறைவன் மீது ஒருமுனைப்படுத்தப் படுகிறது.

உங்கள் பல அருளாசிகளுக்கு, காலண்டர் நன்றி செலுத்தும் நேரத்தைக் குறிக்கும் போது மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளுமே நன்றியுள்ளவர்களாக இருங்கள். நன்றியுணர்வின் அடிப்படை பொருள் சார்ந்த வளமாக இருக்கக்கூடாது. உங்கள் உலக உடைமைகள் பலவாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, நீங்கள் இறைவனின் கொடைகளால் நிறைந்திருக்கிறீர்கள். அவனை நேசியுங்கள், அவன் உங்களுக்குக் கொடுக்கக்கூடிய வெளிப்புற விஷயங்களுக்காக அல்ல, மாறாக உங்கள் தந்தையாக அவன் தன்னை உங்களுக்குக் கொடுத்த வரத்திற்காக அவனை நேசியுங்கள்.

என் இதயம் மிகுந்த நன்றியுடன் இருக்கிறது; அது அவனுடைய அன்பால் பொங்கி வழிகிறது. இவ்வாழ்வில் நான் விரும்பிய எல்லாவற்றையும் அவன் எனக்கு அளித்துள்ளான்; எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன்னையே தந்தருளி இருக்கிறான். எத்தகைய நன்றியை நான் உணர்கிறேன்! என் இதயத்தில் கண்ணாமூச்சி விளையாடிய அவன் இப்போது எவ்வேளையிலும் அருகிலேயே இருக்கிறான். மெய்யெனத தோன்றும் அனைத்து வெளிப்பாடுகளின் சாகசங்களுக்குப் பின்னால் அவன் ஒளிந்திருக்கிறான். அவன் உங்களுக்காக காத்துக் கொண்டு அங்கே இருக்கிறான். வேதனையின் ஊடாக அல்லலுற வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. அவனிடம் விரையுங்கள். பேரன்பன் காத்துக் கொண்டிருக்கிறான்; அவனது கரங்கள் உங்களை வரவேற்க, உங்களை ஆன்மீகமயமாக்க மற்றும் அழிவற்றவர்களாக்கத் தயார் நிலையில் இருக்கின்றன.

இதைப் பகிர