வாழ்க்கை மற்றும் யோக விஞ்ஞானத்தின் நோக்கம்
யோகத்தின் மையத்தில் என்ன உள்ளது?
ஆன்மாவை பரமாத்மாவுடன் இணைப்பதுதான் யோகம் — அனைவரும் தேடும் அந்தப் பேரானந்தத்துடனான மறு இணைப்பு. இது ஓர் அற்புதமான விளக்கம் அல்லவா? பரமாத்மாவின் என்றும் புதிய பேரானந்தத்தில் நீங்கள் உணரும் ஆனந்தம் வேறெந்த மகிழ்ச்சியை விடவும் மிகச் சிறந்தது என்றும், உங்களை அந்த நிலையிலிருந்து எதுவும் கீழே கொணரமுடியாது என்றும் நீங்கள் திடநம்பிக்கைக் கொள்கிறீர்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
பண்டைய காலங்களிலிருந்தே தியானம் இந்தியாவின் யோக தத்துவத்தின் மையமாக இருந்து வருகிறது. அதன் நோக்கத்தை யோகம் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தத்தில் காணலாம்: எல்லையற்ற, சாசுவத பேரின்பம் அல்லது பரம்பொருளுடனான, நமது தனிப்பட்ட உணர்வுநிலை அல்லது ஆன்மாவின், “ஐக்கியம்”.
பரம்பொருளின் பேரின்ப உணர்வுநிலையுடனான இந்த ஐக்கியத்தை அடைய — இதனால் அனைத்து வகையான துன்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள—கால சோதனைகளை வென்ற முறையான செயல்முறையைப் பின்பற்றும் பொறுமையான தியானப் பயிற்சி தேவைப்படுகிறது. அதாவது, நாம் ஒரு அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்.
ராஜா (“மேன்மையான”) யோகம் என்பது ஆன்ம-அனுபூதிக்கான முழுமையான விஞ்ஞானமாகும்-யோக சாத்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட தியானம் மற்றும் சரியான செயலின் படிப்படியான வழிமுறைகள், அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் சனாதன தர்மத்தின் (“சாசுவத சமயம்”) அத்தியாவசிய நடைமுறைகளாக வழி வழியாக வழங்கப்படுகின்றன. யோகத்தின் இந்த காலத்திற்கு அப்பாற்பட்ட உலகளாவிய அறிவியல்தான் அனைத்து உண்மையான மதங்களின் மையத்தில் உள்ள ஆழ்ந்த போதனைகளுக்கு அடிப்படையாக உள்ளது.
யோகதா சத்சங்க ராஜ யோக போதனைகள், கிரியா யோக அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட, உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றில் பரிபூரண வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கும் ஒரு வாழ்க்கை முறையை கோடிட்டுக் காட்டுகின்றன, இதில் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் மற்றும் பதஞ்சலி முனிவர் ஆகியோரால் குறிப்பிடப்பட்ட ஆனால் விளக்கப்படாத பிராணயாமா (உயிர்-சக்தி கட்டுப்பாடு) உத்தியும் அடங்கும். பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் பெருமளவில் இழந்திருந்த கிரியா யோகம், மகாவதார் பாபாஜி, லாஹிரி மகாசயர், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தர் ஆகிய கீர்த்திமிகு யோக ஆசான்கள் பரம்பரையால் நவீன யுகத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது.
கிரியா யோக விஞ்ஞானத்தை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு வரவும், அதை உலகெங்கும் பரப்பவும் பரமஹம்ஸ யோகானந்தர் அவரது வணக்கத்திற்குரிய குரு பரம்பரையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இந்த நோக்கத்திற்காகவே அவர் 1920 இல் ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்-ஐ நிறுவினார்.
சமநிலை கிரியா யோகப் பாதையின் மையம், யோகதா சத்சங்க பாடங்களில் பரமஹம்ஸ யோகானந்தரால் கற்பிக்கப்பட்ட விஞ்ஞான தியான உத்திகளின் தினசரி பயிற்சியே ஆகும். தியானம் செய்வதன் மூலம் உடல் மற்றும் மனதின் அமைதியின்மையை எவ்வாறு அமைதியுறச் செய்வது என்பதைக் கற்றுக்கொள்கிறோம், எனவே நம்மைச் சுற்றியுள்ள உலகில் என்ன நடந்தாலும், நீடித்த அமைதி, அன்பு, ஞானம் மற்றும் ஆனந்தத்தை நம் இருப்பின் இயல்பாக நாம் உணர முடியும்.
அதிகம் தியானம் செய்யுங்கள். அது எவ்வளவு அற்புதமானது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். பணம் அல்லது மானுட அன்பு அல்லது நீங்கள் நினைக்கக்கூடிய வேறு ஏதாவது ஒன்றை நாடுவதில் மணிக்கணக்காக நேரம் செலவிடுவதை விடத் தியானம் செய்வது உத்தமமானது. எவ்வளவு அதிகம் நீங்கள் தியானம் செய்கிறீர்களோ, செயலில் ஈடுபட்டிருக்கும்போது எவ்வளவு அதிகம் உங்கள் மனம் ஆன்மீக நிலையில் மையம் கொண்டுள்ளதோ, அவ்வளவு அதிகம் உங்களால் புன்னகை புரிய முடியும். நான் எப்பொழுதும் அந்த இறை-பேரானந்த உணர்வு நிலையிலேயே இருக்கிறேன். நான் தனியாக இருந்தாலும் சரி அல்லது மக்களுடன் இருந்தாலும் சரி, என்னை எதுவும் பாதிப்பதில்லை; இறைவனின் அந்த ஆனந்தம் எப்பொழுதும் இருக்கிறது. என் புன்னகையை நான் தக்க வைத்துள்ளேன்—ஆனால் அதை நிரந்தரமாக வெல்வதற்கு கடின உழைப்பு தேவையாக இருந்தது! அதே புன்னகைகள் உங்களுக்குள்ளும் உள்ளன; அதே மகிழ்ச்சியும் ஆன்மாவின் பேரானந்தமும் உள்ளன. நீங்கள் அதை முயன்று பெற வேண்டியதில்லை; மாறாக: அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
தியான ஆய்வு கூடத்தின் உள்ளே
உங்களுக்கு நான் கூறியுள்ள எல்லா அனுபவங்களும் விஞ்ஞான ரீதியாக அடையக் கூடியவை. ஆன்மீக நியதிகளை நீங்கள் பின்பற்றினால், பலன் நிச்சயம்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
ஒரு குறிப்பிட்ட பரிசோதனையின் முடிவுகளை சரிபார்க்க ஒரு விஞ்ஞானி ஒரு ஆய்வகத்திற்குச் செல்வது போல, மெய்ம்மையின் மையத்தை ஊடுருவி பார்த்த இந்தியாவின் ரிஷிகள் மற்றும் எக்காலத்திலும், உண்மை நாடிய எந்நாட்டினராலும் நிரூபிக்கப்பட்ட அதே முடிவுகளைப் பெற யோகி தியானத்தின் “ஆய்வகத்திற்குள்” செல்ல முடியும்.
எதையும் குருட்டு நம்பிக்கையாகவோ, கோட்பாடாகவோ ஏற்றுக்கொள்ளும்படி விஞ்ஞானம் நம்மைக் சொல்வதில்லை. பல நூற்றாண்டுகளாக யோகி-விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டு பயன்படுத்தி வெளிப்படுத்தப்பட்ட தெளிவான தியான முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், அவற்றின் செயல்திறனை நாமே நிரூபிக்க முடியும் – மேலும் நாம் இந்த வரையறுக்கப்பட்ட உடல்கள் என்ற தவறான, ஆனால் உறுதியான கருத்தை படிப்படியாக வெல்லலாம். இவ்வாறு அகத்துள் உறையும் பரமாத்வான, ஆன்மா என்ற முறையில், நாம், உலகின் இருமைகள் மற்றும் சோதனைகளால் பாதிக்கப்படாதவர்கள்; நாம் எப்போதும் ஆனந்தமய எல்லையற்ற பரம்பொருளுடன் ஒன்றாயிருக்கிறோம் என்ற உண்மையைக் கண்டறிய முடியும். பரமாத்வுடனான தனது ஐக்கியத்தை முழுமையாக உணர்ந்த ஒரு உண்மையான குருவின் வழிகாட்டுதலின் கீழ் சரியான தியான முறைகளைப் பயிற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஆழமான புரிதல் இறுதியில் வரக்கூடும்.
இந்த விஞ்ஞான யுகத்தில், ஸ்தூல பிரபஞ்சத்தின் பரந்த விரிவுகள் முதல் மிகச்சிறிய துகள்கள் வரையிலான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது, ஆன்மீக சாம்ராஜ்யத்தைப் புரிந்துகொள்வதற்கு சமமான சாகச மற்றும் அறிவியல் அணுகுமுறை தேவை. வெறுமனே மத நம்பிக்கைகளைப் பற்றி விவாதிப்பதிலிருந்து நேரடி அனுபவத்தின் மூலம் சத்தியத்தை அறியும் மன நிறைவிற்கு நமது ஆன்மீக ஆராய்ச்சியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய அறிவை வழங்கும் முறையான நடைமுறைகள் மற்றும் விதிமுறைப் பயிற்சிகளை பின்பற்ற விரும்பும் எவராலும், இதே உண்மை, மெய்ப்பிக்க வல்லதாக இருக்க வேண்டும்.
ஒரு ஆன்மீக விஞ்ஞானியாக யோகியானவர், அவர் தம் உணர்வுநிலையில்—ஆன்மா மற்றும் பரம்பொருளின் சாசுவத தன்மையை முற்றிலும் தெளிவுடனும் துல்லியத்துடனும் முழுமையான வியப்புடனும் உணரக்கக்கூடிய ஒரே ஆய்வகம்—தெய்வீக தொடர்பின் உணர்வுபூர்வ அமைதி, அன்பு, ஞானம் மற்றும் ஆனந்தத்தை உணர தியான உத்திகளைப் பயிற்சி செய்கிறார்.
யோக தியானத்தில், தியானிப்பவர், பிராணயாமா (உயிர்-சக்தி கட்டுப்பாடு) என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையால் புலன் மற்றும் கட்டளை நரம்புகளிலிருந்து உயிர் சக்தியை (பிராணா) திரும்பப் பெற்று முதுகுத்தண்டு மற்றும் மூளைக்குள் உள்ள உயர் விழிப்புணர்வு மையங்களுக்கு அதை இயக்குகிறார். உள்முகமாக இயக்கப்பட்ட பிராணனானது தானாகவே புற உலகிலிருந்து உணர்வுநிலையை அகத்துள் எல்லையற்ற சாம்ராஜ்ஜியத்திற்கு இயக்குகிறது. சிந்தனை அல்லது தத்துவார்த்த சிந்தனையின் தெளிவற்ற மன செயல்முறையாக இல்லாமல், பிராணயாமா தியானம் என்பது ஆன்மாவின் எல்லையற்ற திறனை வெளிக்கொணரும் ஒரு காலத்தால் நிரூபிக்கப்பட்ட வழியாகும்.
விஞ்ஞானிகள் பிரார்த்தனையின் மூலம் மட்டுமே கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில்லை, மாறாக இயற்கையின் நியதிகளை பயன்படுத்துவதன் மூலம் செயல்படுத்துகிறார்கள். அது போலவே யார் நியதியைப் பின்பற்றுகிறாரோ, தியான அறிவியலை உபயோகிக்கிறாரோ அவரிடம் இறைவன் வருவான். மக்கள் மதச்சாத்திரம் எனும் காட்டுக்குள் அலைந்துவிட்டு தாங்களே தொலைந்து போகின்றனர். வீணாக நான் இறைவனைத் தேடி கோயில் கோயிலாகச் சென்றேன்; ஆனால் இறைவனை அதிகமாக நேசிப்பவர்களுக்குள் ஆன்மீகக் கோயில்களைக் கண்டபொழுது அவன் அங்கிருப்பதைக் கண்டேன். அவனை அழகான பிரமாண்ட கட்டிடங்கள் மூலமாக விலைக்கு வாங்க முடியாது. தொடர்ந்து அவனை அழைத்துக் கொண்டிருக்கும் கண்ணீரால் கழுவப்பட்ட இதயபீடத்தில் குடியேறுகிறான். இறைவன் என்பது நிஜம். வருடக்கணக்கான தியானத்தில் தங்களையே அர்ப்பணித்து கொண்ட குருமார்கள் அவனைக் கண்டுள்ளார்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
நமது ஊக்கமாக பேரானந்தம்
நீங்கள் நாடும் வெவ்வேறான அனைத்து விஷயங்களிலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உங்களது விருப்பங்களின் நிறைவேற்றத்தின் மூலம், உண்மை நிலையில் நீங்கள் மகிழ்ச்சியையே நாடிக்கொண்டிருக்கிறீர்கள்…. நீங்கள் ஏன் ஆனந்தத்தை நேரடியாக நாடக்கூடாது?
— பரமஹம்ஸ யோகானந்தர்
பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்காவில் தனது முதல் சொற்பொழிவிலும், சமய விஞ்ஞானம் என்ற தனது நூலிலும், சத்-சித்-ஆனந்தம் — என்றும் உள்ள, எல்லாம்-அறியும், என்றும்-புதிய ஆனந்தம் -என்ற இறைவனைப் பற்றிய பண்டைய வேதக் கருத்தை மேற்கத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
நமது பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றும் நம்முடைய முயற்சிகளுக்கு பின்னால், இன்பத்திற்கான அடிப்படை ஏக்கமும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான விருப்பமும் இருக்கிறது அல்லவா? பரமஹம்ஸர் தனது சொற்பொழிவுகளில் கலந்து கொண்டவர்களையும், தனது கிரியா யோக போதனைகள் மூலம் பின்னர் மாணவர்களாக ஆனவர்களையும் அந்த மகிழ்ச்சியை நேரடியாகக் கண்டுணருமாறு அழைப்பு விடுத்தார் — யோக தியான விஞ்ஞான முறையைப் பயன்படுத்தி, பரம்பொருளின் பேரானந்தத்தை தங்களுக்குள் தேடுமாறு அழைப்பு விடுத்தார்.
தியானத்தில் இறைவனை பேரானந்தமாக அறியும் வாய்ப்பைப் பற்றிப் பேசுகையில் பரமஹம்ஸர் கூறினார்: “அவன் அனைவரின் அமைதியான அனுபவத்திற்குள் வருவான். நாம் அவனை பேரானந்த-உணர்வு நிலையில்தான் உணர்ந்தறிகிறோம். அவனது இருப்பு குறித்து வேறு நேரடியான ஆதாரம் எதுவும் இருக்க முடியாது. இறைவனில் நமது ஆன்மீக நம்பிக்கைகளும் நாட்டங்களும் முழு நிறைவை பேரானந்தமாக காண்கின்றன, நமது பக்தியும் அன்பும் ஒரு வடிவத்தை காண்கின்றன.”
ஆனந்தமானது தாளலயத்துடன் எந்நேரமும் மாறிக்கொண்டும், ஆனால் அவ்வாறிருந்தும் வெவ்வேறான பாத்திரங்கள் மற்றும் நடிப்புகளால் மக்களை மகிழ்வூட்டும் ஒரு நடிகரைப் போல், அது தன்னுள் மாறுதல்களின்றி நடிக்கிறது என்றால் அந்த ஆனந்தத்தை தான் நாம் அனைவரும் நாடிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய ஆனந்தத்தை முறை தவறாத ஆழ்ந்த தியானத்தின் வாயிலாக மட்டுமே காண முடியும். மாற்றமில்லா என்றும் புதிய ஆனந்தத்தின் அக நீரூற்று தான் நமது தாகத்தை தணிக்க முடியும். அதன் உண்மையான இயல்பின்படி இந்த தெய்வீக ஆனந்தம் மட்டும்தான் நமது மனத்தை என்றும் தளர விடாமல் அல்லது அதனிடத்தில் வேறொன்றை மாற்றிக் கொள்ள நமக்கு விருப்பமூட்டாத ஒரே வசீகர சக்தியாகும்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
யோகத்தின் உலகளாவிய தன்மை
YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான சுவாமி சிதானந்த கிரி, 2017 இல் இந்தியாவில் உரையாற்றும்போது கூறினார்: “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா அனைத்து மனிதகுலத்திற்கும் மிக உயர்ந்த ஆன்மீக சத்தியத்தின் பாதுகாவலனாக இருந்து வருகிறது. இந்தியாவின் சிறந்ததை முதலில் மேற்கத்திய நாடுகளுக்கும், பின்னர் உலகிற்கும், மற்றும் தனது பிரியமான இந்தியாவுக்கும் திரும்பக் கொண்டுவருவது பரமஹம்ஸரின் சிறப்புப் பணியாக இருந்தது. இந்தியாவின் மேன்மை மிகு நாகரிகத்தின் உயர்ந்த பொற்கால யுகத்திலிருந்து, இந்தியாவின் உலகளாவிய ஆன்மீகத்தின் சாராம்சத்தை அதன் தூய வடிவத்தில் கொண்டு வந்தார். அதுதான் யோகம். இது ஒரு விஞ்ஞானமே தவிர, ஒரு மதம் அல்லது மதத்தின் ஒரு பிரிவு அல்ல; இதன் காரணமாக, இந்த ஆன்மீக சேவை — யோகத்தின் ஒளி — மனிதகுலம் முழுவதற்குமான ஒரு ஆன்மீக அருளாசியாக உண்மையிலேயே உலகளாவியதாக இருக்க முடியும்.”
பரமஹம்ஸ யோகானந்தர் யோகப் பயிற்சி செய்வதற்கும் அதன் உன்னத பலன்களைப் அடைவதற்கும் எந்தவொரு குறிப்பிட்ட தேசியம், இனம் அல்லது சமயமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அடிக்கடி சுட்டிக்காட்டினார். ஒரு விஞ்ஞானமாக அதன் உண்மையான உலகளாவிய தன்மை அதன் விளைவுகளை எந்தவொரு நாட்டிலிருந்தும், கிழக்கோ அல்லது மேற்கோ எவரும் பெற முடியும் என்பதில் உள்ளது.
யோக தியானத்தின் தொடர்ச்சியான பயிற்சி மூலம், நாம் அனைவரும் ஆனந்தம், அன்பு, கருணை, அமைதியை ஆழமாக உணர முடியும். இந்த மாற்றங்கள் நமக்குள் நிகழும்போது, அவற்றின் தாக்கம் வெளிப்புறமாக, கண்ணுக்குத் தெரியாத ஒரு விதிமுறை மூலம், முதலில் நமது உடனடி குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பின்னர் உலகத்திற்கும் பரவுகிறது. பரமஹம்ஸர் கூறியது போல், “உங்களை சீர்திருத்திக் கொண்டால், பல்லாயிரம் பேரை நீங்கள் சீர்திருத்துவீர்கள்”.
யோகத்தின் ஒரு பெரிய நன்மை என்னவென்றால், தியானம் செய்பவருக்கு அனைத்து மனிதகுலத்துடனும் ஒருமை உணர்வு உருவாகிறது. ஒருவரின் ஆன்மீக நம்பிக்கைகள் அல்லது நம்பிக்கையற்ற தன்மை எதுவாக இருந்தாலும், யோக விஞ்ஞானத்தைப் பயிற்சி செய்யும் எவரும் இறுதியில் தெய்வீகம் அனைத்திலும் மற்றும் அனைவரிடத்திலும் இருப்பதை உணருவார்.
இத்தகைய உலகளாவிய தன்மை கொண்ட இதயங்களும், மனங்களும், தற்பொழுது, உலகம் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக அதிவேகமாக சுருங்கி, நம் அனைவரையும் மிகவும் நெருக்கமாக வைத்திருக்கும் இந்த கால கட்டத்தின் மிகப்பெரிய தேவையாகும். 1951 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது, பரமஹம்ஸர் உலகத்திற்கு தனது செய்தியை சுருக்கமாகக் கூறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். மனிதகுலம் அதன் இன்றியமையாத ஒற்றுமையை உணர்ந்து கொள்வதற்கான அடிப்படைத் தேவையைப் பற்றி அவர் பேசினார்—தீர்க்கதரிசன வார்த்தைகள் சொல்லப் போனால் அவர் அவற்றை முதன்முதலில் கூறியபோது இருந்ததை விட தற்போது இன்றியமையாதவையாக இருக்கிறது:
“என் உலக சகோதர சகோதரிகளே: இறைவன் தான் நம் தெய்வத் தந்தை மேலும் அவன் ஒருவனே. நாம் அனைவரும் அவனது குழந்தைகள், மற்றும் இந்த முறையில் உலக ஐக்கிய நாடுகளின் தேக, மன பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியான சீரிய குடிமக்களாக மாறுவதற்காக ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்வதற்கு ஆக்கபூர்வமான வழிகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆயிரம் மனிதர்கள் உள்ள ஒரு சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரும் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக மற்றவர்களோடு ஆதாய இழப்பில், லஞ்சம், சண்டை மற்றும் சூழ்ச்சி வாயிலாக முயன்றால், ஒவ்வொரு நபரும் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது எதிரிகளை பெற்றிருப்பார்; ஆனால், ஒவ்வொரு நபரும் மற்றவர்களுடன் ஒத்துழைத்தால்-தேக, மன, பொருளாதார, ஆன்மீகரீதியாக-ஒவ்வொருவரும் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது நண்பர்களைப் பெற்றிருப்பர். அனைத்து நாடுகளும் ஒருவருக்கொருவர் அன்பின் மூலம் உதவி புரிந்து கொண்டால், இந்த பூமி முழுவதும் அனைவரது நன்மையை மேம்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகளுடன் அமைதியில் வாழும்….
முன்பு எப்போதுமில்லாதவாறு வானொலி, தொலைக்காட்சி, விமானப்பயணம் போன்ற சாதனங்கள் நம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளன. ஆசியா ஆசியர்களுக்கு மட்டும், ஐரோப்பா ஐரோப்பியர்களுக்கு மட்டும், அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கு மட்டும் மற்றும் இவ்வாறாக, என்று இனிமேல் இருக்க முடியாது; ஆனால் இறைவனின் கீழ் உலகம் ஒரு ஐக்கிய நாடாக இருந்தால் ஒவ்வொரு மனிதனும் தேக, மன மற்றும் ஆன்ம நிறைவிற்கான ஒவ்வொரு வாய்ப்புடனும் ஒரு லட்சிய குடிமகனாக திகழுலாம் என நாம் கற்க வேண்டும்.
“அதுதான் உலகத்திற்கான எனது செய்தி, எனது வேண்டுகோள்.”
உடல், மன மற்றும் ஆன்ம ரீதியில் சிறந்த குடிமக்களாக உருவாவதற்கான பரஸ்பர உதவிக்கு ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தும் “ஆக்கபூர்வமான வழிமுறைகளை” உலகளாவிய யோக விஞ்ஞானத்தில் காணலாம்.
இராஜ யோக எட்டடுக்கு பாதை
காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: த பகவத் கீதா, என்ற தனது உறுதியான மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில், பரமஹம்ஸ யோகானந்தர், இந்தியாவின் மிகவும் பிரியமான யோக மறைநூலான கீதை, யோக விஞ்ஞானத்தின் முழுமையை உருவகத்தில் உணர்த்துகிறது என்பதை வெளிப்படுத்தினார்.
கீதையில் பொதிந்துள்ள யோகச் செய்தியை முழுமையாகப் புரிந்து கொண்ட பதஞ்சலி முனிவர், ராஜ (“மேன்மையான”) யோகப் பாதையின் சாரத்தை தனது குறுகிய ஆனால் உன்னத படைப்பான யோக சூத்திரங்களில் எளிமையான மற்றும் முறையான வடிவத்தில் ஒழுங்கமைத்தார்.
பரமஹம்ஸ யோகானந்தர் கூறியதாவது: “பதஞ்சலி, இறை-ஐக்கியத்தின் மிகப் பரந்த மற்றும் பெரும் புதிரான இறை-ஐக்கிய விஞ்ஞானத்தின் சுருக்கப்பட்ட சாரத்தை ஒரு குறு சூத்திரங்கள் தொடராக வழங்குகிறார். ஆன்மாவை வேறுபடுத்தப்படாத பரம்பொருளுடனான ஆன்ம ஐக்கியத்தின் வழிமுறையை மிகவும் நேர்த்தியான தெளிவான மற்றும் சுருக்கமான முறையில் முன் வைக்கிறார், இதனால் பல தலைமுறை அறிஞர்கள் யோக சூத்திரங்களை யோகம் பற்றிய முதன்மையான பண்டைய படைப்பாக அங்கீகரித்துள்ளனர்.”
பதஞ்சலியின் யோக அமைப்பு எட்டடுக்குப் பாதை என்று அறியப்படுகிறது, அது இறை-அனுபூதி எனும் இறுதி இலக்கிற்கு வழிநடத்திச் செல்கிறது.
- யமம் (ஒருவர் விலகியிருக்க வேண்டிய நடத்தைகளை கோடிட்டுக் காட்டும் தார்மீக விதிகள்): மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்தல், பொய்மை, களவு, கட்டுப்பாடு இல்லாமை (பாலியல் உந்துதலின் கட்டுப்பாடுக் குறைவு) மற்றும் பேராசை
- நியமம் (வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆன்மீக குணங்கள் மற்றும் நடத்தை): உடற் தூய்மை மற்றும் மனத்தூய்மை, எல்லா சூழல்களிலும் மனநிறைவு, சுய-கட்டுப்பாடு, சுய ஆய்வு (ஆழ்ந்த சிந்தனை), இறைவனிடத்திலும் மற்றும் குருதேவரிடத்திலும் பக்தி
- ஆசனம்: சரியான அமர்வு நிலை
- பிராணாயாமம்: உடலில் உள்ள சூட்சும உயிர் மின்னோட்டங்களான, பிராணன் மீதான கட்டுப்பாடு
- பிரத்யாஹாரம்: புற பொருட்களிலிருந்து புலன்களை விலக்குவதன் மூலம் உணர்வுநிலையை அகமுகமாக்குதல்
- தாரணை: குவிக்கப்பட்ட ஒருமுகப்பாடு; மனத்தை ஒரு சிந்தனையின் மீது அல்லது பொருளின் மீது வைத்திருத்தல்
- தியானம்: தியானம், பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ள – பேரின்பம், பேரமைதி, பேரண்டப் பேரொளி, பேரண்ட பெருவொலி, பேரன்பு, ஞானம் – போன்ற எல்லையற்ற இறை அம்சங்கள் ஒன்றில், இறைவனைப் பற்றிய பரந்த உணர்வில் ஒன்றுதல்
- சமாதி: பேரண்டப் பரம்பொருளுடனான தனிப்பட்ட ஆன்மாவின் ஐக்கியத்தில் பெறும் உயர்-உணர்வுநிலை அனுபவம்
மிக உயர்ந்த பிராணாயாமா பயிற்சி (உயிர்-சக்தி கட்டுப்பாடு, எட்டடுக்குப் பாதையின் நான்காவது படி), உணர்வுநிலையின் அகமுகமாக்கலை அடையும் பூர்வாங்க இலக்குடன் கூட (பிரத்தியாஹாரம்) பரம்பொருளுடனான ஐக்கியம் என்ற இறுதி இலக்குடன் (சமாதி) ராஜ யோகத்தின் விஞ்ஞான தியான உத்திகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது.
பொதுவாக உயிர் சக்தியானது நரம்பு மண்டலம் மற்றும் புலன்கள் வழியாக தொடர்ந்து வெளிப்புறமாக பாய்கிறது, இதனால் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை நாம் உணர்ந்தறிகிறோம். பிராணாயாம உத்திகள் மூலம் அதே உயிர் சக்தி (பிராணா) முதுகுத்தண்டு மற்றும் மூளையில் உள்ள ஆன்மீக விழிப்புணர்வின் உயர் மையங்கள்பால் உள்நோக்கி இயக்கப்படுகிறது, இதனால் அகத்தே உள்ள பரந்த உலகத்தை நாம் உணர முடியும்.
யோகதா சத்சங்க பாடங்களில் YSS கற்பிக்கும் தியான உத்திகள், குறிப்பாக கிரியா யோக உத்தி, உயரிய ராஜ யோக பிராணாயாம உத்திகளாகும். பரமஹம்ஸ யோகானந்தர் அவற்றை ஆன்மாவை பரம்பொருளின் பேரின்பத்துடன் மீண்டும் இணைப்பதற்கான மிக விரைவான வழி என்று அடிக்கடி கூறுவார்.
பிராணயாமா பயிற்சி மூலம், சாதாரணமாக நமது உணர்வுநிலையை வெளிப்புறமாக வைத்திருக்கும் உடல் சக்தி ஓட்டத்தை கட்டுப்படுத்தும் நேரடி வழிமுறைகளால் – நமது கவனத்தை வாழ்க்கையின் திசை திருப்பல்களிலிருந்து விடுவிக்கிறோம். இதன் மூலம், நமது உண்மையான ஆன்மா, எப்போதும் பரம்பொருளுடன் ஒன்றிணைந்திருக்கும் அசைக்க முடியாத அழிவற்ற ஆன்மா என்று அறிந்து கொள்வதைத் தடுக்கும் அமைதியற்ற எண்ணங்கள் மற்றும் கொந்தளிப்பான உணர்ச்சிகளை அமைதிப்படுத்துகிறோம்.
மனித குலத்தின் மிக மேம்பட்ட நுட்பவியல்
நமது வாழ்க்கையின் பல அம்சங்களில் நுட்பவியல் ஒரு முக்கியமான உதவியாக உள்ளது. ஆனால் நாம் அதிக நேரம் நம் டிஜிட்டல் சாதனங்களுடன் இணைந்திருப்பதால், நமக்குள் அமைதி, எளிமை, நல்லிணக்கம், இயல்பான வியப்பு ஆகியவற்றிலிருந்து நாம் மேலும் மேலும் விலகிக் கொண்டேயிருப்பதாக உணர்கிறோம்.
எளிமையாகச் சொல்வதானால், நுட்பவியல் என்பது விரும்பிய முடிவை விரைவாக அடைய ஒரு உத்தியைப் பயன்படுத்துவதாகும். அதன் பயன்பாடு மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் நாம் வாழும் இவ்வுலகம் தொடர்பாக நம்மைப் பற்றிய ஆழமான புரிதலை அடைவதற்கான நமது திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
மனிதகுலத்தின் மிகவும் மேம்பட்ட நுட்பவியலை ராஜ யோக முறையில் காணலாம், யோக தியான உத்திகளை பயன்படுத்துவதில், குறிப்பாக கிரியா யோக உத்திகளில் காணலாம்.
பரமஹம்ஸர் தன்னுடைய ஒரு யோகியின் சுயசரிதத்தில் கிரியா யோக விஞ்ஞானம் என்ற அத்தியாயத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “யோகத்தின் நிச்சயமானதும் முறையானதுமான திறனைப்பற்றிக் குறிப்பிடும்போது கிருஷ்ணர், தொழில் நுட்ப வல்லுநரான யோகியை இவ்வாறு புகழ்கிறார், ‘யோகி என்பவன் உடலைக் கட்டுப்படுத்தும் தவசிகளைவிட மேலானவன், ஞான மார்க்கத்தை (ஞான யோகா) அல்லது கர்ம மார்க்கத்தை (கர்ம யோகா) பின்பற்றுபவர்களை விடவும் கூட மேலானவன்; ஓ சீடன் அர்ஜுனா, நீ யோகியாவாய்!’”
“தொழில்நுட்ப வல்லுநரான யோகி”, அதாவது யோகத்தின் இலக்கை அடைவதற்கு குறிப்பிட்ட உத்திகளைப் பயன்படுத்தும் மெய்ப்பொருள் நாடும் ஒருவர், ஒரு உறுதியான முறையை பின்பற்றுகிறார், மேலும் அது வாழ்க்கையின் ஆற்றலையும் ஆனந்தத்தையும் பறிக்காது, மாறாக ஆனந்தமய அழிவற்ற பரமாத்மா அல்லது ஆன்மாவுடன் தொடர்புகொள்வதன் மூலம் உடல் மற்றும் மனதின் எல்லையற்ற புதுப்பித்தல் மற்றும் புத்துணர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணனின் சிறந்த சீடனான அர்ஜுனனைப் போலவே, கிரியா யோக உத்தியைப் பயன்படுத்துவதன் மூலம் நாமும் அத்தகைய சமநிலை மற்றும் அக அமைதியை அடைய முடியும். நமது இயல்பான முழுமை மற்றும் நல்-வாழ்வை இழக்காமல், இன்றைய நுட்பவியல் சார்ந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அறியும் சமநிலையையும் விவேகத்தையும் நாம் பெற முடியும்.
பரமஹம்ஸரின் வார்த்தைகளில் சொல்வதானால், இதற்கான வழி “அமைதியாக செயற்படுதல் மற்றும் விழிப்புடன் அமைதியாக இருத்தல்” என்பதே. நமது வாழ்க்கையில் (செயல்படும்போதும் மற்ற சமயத்திலும்) அமைதியாக செயல்பட, நாம் முதலில் தியானத்தில் விழிப்புடன் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் சமகால உலகின் கணிக்க முடியாத சவால்களையும் விரைவான வேகத்தையும் வழிநடத்த தேவையான ஞானத்தை பெற வேண்டும்.
யோகதா சத்சங்க பாடங்களில் கற்பிக்கப்பட்டது போன்ற ராஜ யோக தியான உத்திகளில், மனிதகுலம் மிகவும் மேம்பட்ட நுட்பவியலை கொண்டுள்ளது, மேலும் என்றும்-புதிய அமைதி மற்றும் ஆனந்தம் நிறைந்த உண்மையான வெற்றிகரமான வாழ்க்கைக்கான வழியையும், நமது மிக உயர்ந்த திறன்களை அடைவதற்கான வழியையும் கொண்டுள்ளது.
உங்கள் அமைதியின் கதவைத் திறந்துவிட்டு, மௌனத்தின் காலடிகளை மெதுவாக உங்கள் எல்லா பணிகளின் ஆலயத்தில் நுழைய அனுமதியுங்கள். அமைதி நிறைந்த மனநிலையுடன் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுங்கள். உங்கள் இதய துடிப்பின் பின்னால், இறைவனின் அமைதியின் துடிப்பை நீங்கள் உணருவீர்கள். தியானத்தின் அமைதியால் உங்கள் இதயத்தை நிரப்புங்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
பக்தியுடன் செய்யப்படும் கிரியா யோகப் பயிற்சி
பரமஹம்ஸ யோகானந்தர் அறிவித்தார்: “பக்தியுடன் செய்யப்படும் கிரியா யோகப் பயிற்சி – அது கணிதம் போல செயல்படுகிறது; அது தவற முடியாது.”
கிரியா யோகப் பாதையில் கற்பிக்கப்படுவது போன்ற யோகப் பயிற்சியையும் அதன் தியான உத்திகளையும் பயிற்சிக்கத் தொடங்கும் எவருக்கும், அவர்கள் இதயங்களை மிகவும் ஈர்க்கும் இறை அம்சத்துடன் ஆழமான மற்றும் நீடித்த உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை YSS சுட்டிக்காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, பரமஹம்ஸர் தெளிவுபடுத்தியது போல்: “யோக விஞ்ஞானம் முழுவதிலும் தேர்ச்சி பெறுவதை விட இறைவனைத் தேடுவதில் உள்ள ஒரு தனிப்பட்ட அம்சம் முக்கியமானது.” எல்லையற்ற பரம்பொருளின் வாயிலை அடைய நாம் யோக அறிவியலைப் பின்பற்ற வேண்டும், ஆனால் அந்த கதவு வழியாக இறைவன் நம்மை அழைத்துச் செல்ல நமது அன்பு, நமது தனிப்பட்ட ஏக்கம் தேவை.
நீங்கள் இறைவனை தெய்வத் தந்தையாக, அல்லது தெய்வத் தாயாக, அல்லது நண்பராக, அல்லது அன்புக்குரியவராக நினைக்க விரும்பலாம். சிலர் இறைவனை ஒரு உண்மையான குருவாக அல்லது கிறிஸ்து அல்லது கிருஷ்ணர் போன்ற தெய்வீக அவதாரத்தில் வெளிப்படுவதைக் காண சிலர் ஈர்க்கப்படுகிறார்கள், அல்லது அவர்கள் எல்லையற்ற அன்பு, இன்பம் அல்லது ஞானம் போன்ற வடிவமற்ற அம்சத்திற்கு ஈர்க்கப்படுவார்கள். இறைவனின் எந்த உருவம் உங்கள் இதயத்தை மிகவும் கவர்ந்தாலும், அதை முழுமனதுடன் தேடுங்கள், இறைவன் மீதான பக்தியின் மூலமும், இறுதியில் ஒன்றிணைவதன் மூலமும் வேறு எதுவும் நிறைவேற்ற முடியாத ஒரு ஏக்கத்தை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என்ற விழிப்புணர்வுடன் முழு மனதுடன் அதைத் தேடுங்கள்.
பரமஹம்ஸஜி கூறினார், “கடவுள் உங்கள் இதயத்தின் மொழியைக் கேட்கிறார் — உங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் மொழி.” தியான உத்திகள் பயிற்சிக்குப் பிறகு, அதைத் தொடர்ந்து வரும் அசைவற்ற நிலையில் மூழ்குவதற்கு நேரம் எடுத்துக்கொண்ட பிறகு, , சம்பிரதாயம் இல்லாமல், பாசாங்கு இல்லாமல் — ஆனால் எளிமையாக, ஒருவருடைய இதய அன்புடன் இறைவனுடன் பேச வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். “உன்னை வெளிப்படுத்து, உன்னை வெளிப்படுத்து” என்று கூறி, பிரபஞ்ச அன்னையை அவளுடைய குழந்தையாக நீங்கள் அழைக்கலாம். அல்லது தெய்வீக நுண்ணறிவு பற்றிய கேள்விகளை நீங்கள் கேட்க விரும்பலாம், உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றிய வழிகாட்டுதலை உண்மையாக நாடலாம்.
இராஜ யோக போதனைகளின் அடித்தளமாக விளங்கும் யோக தியான விஞ்ஞானம், நம்மை தெய்வீகத்துடன் நேரடித் தொடர்புக்குக் கொண்டுவருகிறது. உண்மையான ஏற்புத்தன்மையின் அந்த நிலையில், நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தன்னிச்சையாக தொடர்பு கொள்கிறோம். நமது இதயங்கள், மனங்கள், மற்றும் ஆன்மாக்களுக்கு முற்றிலும் தனிப்பட்ட முறையில் குரல் கொடுக்கிறோம். இயற்கையாகவே, காலப்போக்கில், அந்த உரையாடல் அன்பின் மிக உயர்ந்த இருவழி வெளிப்பாடாக மாறும். “உண்மையான பக்தி, கடவுளைப் பற்றிய உணர்வின் ஆழத்தில் மூழ்கும் ஒரு இடியைப் போன்றது” என்று பரமஹன்சாஜி கூறினார்.
பரமஹம்ஸரின் பின்வரும் வார்த்தைகளில், ஆன்மீகப் பாதையில் பயணிப்பவர், இறைவனின் எந்த அம்சம் மிகவும் கட்டாயமானதாக இருந்தாலும், ஒரு அற்புதமான மற்றும் ஆறுதலான வாக்குறுதியைக் கேட்க முடியும்: “அவனிடத்தில் நீங்கள் அனைத்து இதயங்களின் எல்லா அன்பையும் காண்பீர்கள். நீங்கள் முழுநிறைவைக் காண்பீர்கள். உலகம் உங்களுக்கு அளித்து பின்னர் பறித்துக் கொண்டு, வேதனை அல்லது ஏமாற்றத்தில் உங்களைத் தள்ளுகின்ற ஒவ்வொன்றையும், அதைவிட மிகச் சிறந்த வழியில், துன்பத்தின் எந்த பின்விளைவுகளும் இல்லாமல் இறைவனிடத்தில் நீங்கள் காண்பீர்கள்.”