தெய்வீக அன்பு பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

27 பிப்ரவரி, 2024

பரமஹம்ஸ யோகானந்தர்-தெய்வீக-அன்பு-பற்றி

தெய்வீக அன்பின்‌ ஒரு துளியையாவது நீங்கள்‌ உணர முடிந்தால் கூட உங்களுடைய ஆனந்தம்‌ மிகவும்‌ மகத்தானதாக- மிகவும்‌ ஆட்கொள்ளும்படியானதாக–உங்களால்‌ அதை தாங்கிக்கொள்ள முடியாத அளவு இருக்கும்‌.

நீங்கள்‌ தியானத்தில்‌ இறைவனுடன்‌ தொடர்பு கொள்ளும் பொழுது மிகமிக உயர்ந்த அன்பை அனுபவிக்க முடியும்‌. ஜீவாத்மாவிற்கும்‌ பரமாத்மாவிற்கும்‌ இடையே உள்ள அன்பு, பரிபூரணமானது, அதைத்தான்‌ நீங்கள்‌ எல்லோரும்‌ தேடிக்‌ கொண்டிருக்கிறீர்கள்‌. நீங்கள்‌ தியானிக்கும்‌ பொழுது அன்பு வளருகிறது. லட்சக்கணக்கான ஆனந்த சிலிர்ப்புகள்‌ உங்கள்‌ இதயத்தின்‌ வழியே பாய்கின்றன…. நீங்கள்‌ ஆழ்ந்து தியானித்தால்‌, மனித நாவினால்‌ வர்ணிக்க முடியாத ஓர்‌ அன்பு உங்களைச்‌ சூழும்‌; நீங்கள்‌ அந்த தெய்வீக அன்பை தெரிந்து கொள்வீர்கள்‌, மேலும்‌ அந்தத்‌ தூய அன்பை மற்றவர்களுக்கு உங்களால்‌ அளிக்க முடியும்‌.

என்னுடைய குருநாதர் [ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்] ‘நீ அனைவரையும் சமமாகவே நேசிக்கின்றாயா’ என்று வினவிய பொழுது ‘ஆம்’ என்றநான் கூறியது எனக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அவர் கூறினார், ‘இதுவரையிலும் இல்லை, இதுவரையிலும் இல்லை’. அதன் பிறகு என்னுடைய இளைய சகோதரன் ராஞ்சியில் இருக்கும் எனது பள்ளியில் படிப்பதற்காக வந்தான், அவன் என்னுடையவன் என்ற உணர்வு என் மனத்தில் இருந்தது. என்னுடைய குரு தேவர் ‘இதுவரையிலும் இல்லை’ என்று ஏன் கூறினார் என அப்பொழுது எனக்கு விளங்கியது. படிப்படியாக அந்த உணர்வு அழிந்து என்னுடைய சகோதரனும் நான் நேசிக்கும் அனைத்து மனித குலத்தின் ஓர் அங்கம் தான் என்பதை உணர்ந்தேன்…. ஒரு நாள் மீண்டும் குரு தேவர் என்னிடம் கேட்டார், ‘நீ உலகனைத்தையும் நேசிக்கின்றாயா?’ நான் கூறினேன், ‘நான் நேசிக்கின்றேன்’. அவர் புன்னகையுடன் கூறினார் ‘உன்னுடைய பணி நிறைவடைந்து விட்டது’.

இறைவனின்‌ அன்பு, பரம்பொருளின்‌ அன்பு, அனைத்தையும்‌ உள்‌அடக்கிய அன்பாகும்‌. ஒருமுறை நீங்கள்‌ அதை அனுபவித்து விட்டால்‌, அது உங்களை மேன்மேலும்‌ தொடர்ந்து நிரந்தரமான தளங்களினுள்‌ இட்டுச்செல்லும்‌. அந்த அன்பு உங்கள்‌ இதயத்திலிருந்து நீக்க முடியாதது. அது அங்கே எரியும்‌, மேலும் அந்த நெருப்பில்‌ மற்றவர்களை உங்களிடம்‌ ஈர்க்கின்ற, மேலும்‌ உண்மையிலேயே உங்களுக்குத்‌ தேவைப்படுகின்ற அல்லது நீங்கள்‌ விரும்புகின்ற எதையும்‌ கவர்ந்திழுக்கின்ற பரம்பொருளின்‌ மகா காந்த சக்தியைக்‌ காண்பீர்கள்‌.

இதை நினைவில் வைத்துக்கொள்: நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பிறகு, அன்பு மட்டுமே என் இடத்தை எடுத்துக் கொள்ள முடியும். இரவும் பகலும் இறையன்பில் மிகவும் திளைத்திரு, அதனால் நீ இறைவனைத் தவிர வேறு எதையும் அறிய மாட்டாய்; மேலும் அந்த அன்பை எல்லோருக்கும் வழங்கு.

—பரமஹம்ஸ யோகானந்தர் அவரது மறைவுக்கு சிறிதே காலம் முன்பு ஸ்ரீ தயா மாதாவிடம் (SRF இன் மூன்றாவது தலைவர்) கூறியது

இந்த பொருள் குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் மேலும் உத்வேகமளிக்கும் உரைகளை நமது வலைத்தளத்தின் “எப்படி-வாழ-வேண்டும்” பிரிவில், “அன்பு: மனித அன்பும் தெய்வீக அன்பும்” பக்கத்தில் காணலாம்.

இதைப் பகிர