நம்பிக்கையின் ஆற்றல்மிக்க சக்தி பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்

24 ஜூன், 2024

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களிலிருந்து…

விசுவாசம் என்பது முழுமையான நம்பிக்கை — உள்ளுணர்வு நம்பிக்கை, ஆன்மாவிலிருந்து ஒரு அறிதல், அதாவது கடவுள் உண்மையானவர் மேலும் அவருடைய உதவி மனிதனின் வாழ்க்கையில் எப்போதும் பாயத் தயாராக உள்ளது.

நம்பிக்கை மிகவும் முக்கியமானது, ஏனெனில் தெய்வீக சக்தியை உணரும்திறன் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சந்தேகங்களால் தடைபடுகிறது. நீங்கள் நம்பிக்கையை பயிற்சி செய்ய அது வளர்கிறது; மேலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அனைத்தையும் உங்களால் செய்ய முடியும். நீங்கள் நீண்ட காலமாக ஒரு கருத்தை கொண்டிருக்க முடியுமானால், எதிர்மாறான ஆதாரங்களால் எதிர்க்கப்படும்போதும், அது சாத்தியமற்றது என்று முழு உலகமும் சொன்னாலும், கைவிடாமல் இருந்தால்; உங்களால் மக்களின் எதிர்மறை எண்ணங்களை எதிர்த்துப் போராட முடிந்தால், உங்கள் எண்ணங்களை வலுவாக வைத்து இலக்கை நோக்கி வேலை செய்ய முடிந்தால், அது கண்டிப்பாக வெளிப்படும்.

நம்பிக்கையின் சக்தியுடன், முன்னேறுங்கள், முன்னேறுங்கள்! தினசரி தியானம் செய்வதன் மூலம் அவனை ஒரு போதும் மறவாமல் இருங்கள். ஒவ்வொரு நாளும் புதிய பார்வைகள், அவனுடைய இருப்பைப் பற்றிய புதிய வெளிப்பாடுகள் உங்களிடம் வந்து கொண்டே இருக்கும். ஆற்றல் வரும்; ஏனெனில் அவனுடைய வல்லமை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதை உறுதியாக உணருங்கள்; அது உங்கள் இருப்பில் அமைதியாக ஆழ்ந்திருக்கட்டும். உயிர்ச் சக்தியைக் கட்டுப்படுத்தும் விஞ்ஞானத்தின் [கிரியா யோகம்] மூலம் அனைத்தையும் படைத்து பராமரிக்கும் அவனது சூட்சும சக்திகளில் நீங்கள் தேர்ச்சி பெறும்போது, படைப்புகள் அனைத்தின் மீதான அவனது ஆதிக்கத்தில் நீங்கள் பங்கு பெறுவீர்கள்.

உங்களுடைய நம்பிக்கையின் தலைமையைப் பற்றிக் கொள்ளுங்கள், அத்துடன் பாதகமான சூழ்நிலைகளின் தாக்குதலைப் பொருட்படுத்தாதீர்கள். துர்பாக்கியத்தின் சீற்றத்தை விட அதிக சீற்றம் கொண்டவராயும், உங்களுக்கு நேரும் ஆபத்துகளை விட அதிக துணிச்சல் கொண்டவராயும் இருங்கள். எவ்வளவு அதிகமாக இந்த புதிதாக ஊன்றப்பட்ட நம்பிக்கை அதனுடைய ஆற்றல் வாய்ந்த தாக்கத்தை உங்கள் மீது செயல்படுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக பலவீனத்துக்கான உங்கள் அடிமைத்தனம் அதற்கேற்ப குறையும்.

மே மாதத்தில் வெளியிடப்பட்ட நமது ஆன்லைன் வாராந்திர உத்வேகம் தரும் உரைத் தொடரின் ஒரு பகுதியாக, “அடியூனிங் அவர் லைவ்ஸ் வித் காட்ஸ் பிளேன்” என்ற தலைப்பில் உரையாற்றியபோது, YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, உலகத்தைப் பற்றிய கணிப்புகள் மற்றும் நேர்மறை அணுகுமுறையுடன் நம்பிக்கையுடன் இருப்பதைக் குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் ஆலோசனையைப் பகிர்ந்து கொண்டார். ஸ்வாமி சிதானந்தரின் உரையிலிருந்து புதிதாக வெளியிடப்பட்ட ஒரு சிறு காணொளியில், உலகக் கணிப்புகளைப் பற்றி பரமஹம்ஸர் என்ன கூறினார் என்பதைக் கண்டறியுங்கள் – அதிலிருந்து நீங்கள் உத்வேகத்தையும் நுண்ணறிவையும் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.

இதைப் பகிர