உயிர்சக்தியின் மறைந்துள்ள ஆதாரத்துடன் தொடர்பு கொள்வது பற்றி பரமஹம்ஸ யோகானந்தர்.

10 ஏப்ரல், 2024

ஒரு அறிமுகம்:

நீங்கள் அதிக உயிர்சக்தியை அனுபவிக்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் விரும்புகிறோம். அதை உணர, நாம் என்ன உண்கிறோம், எவ்வளவு ஓய்வெடுக்கிறோம், அல்லது எப்படி பல்வேறு செயல்கள் செய்கிறோம் மற்றும் அதிக உற்சாகத்துடனும் உறுதியுடனும் நம் கனவுகளைத் தொடர்கிறோம் என்பதில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். மேலும் இவற்றின் பலனை நமது ஆற்றலிலும் கண்ணோட்டத்திலும் காணலாம்.

ஆனால் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள், வாழ்க்கை நாடகத்தின் திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும் உயிர்சக்தியின் மூலத்துடன் நாம் உணர்வுபூர்வமாக இணைந்தால், நமது நாட்கள் எவ்வளவு மகத்தான வாழ்க்கையாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் மாறும் என்பதை ஆழமாக வலியுறுத்துகிறது.

“மனிதன் இறைவனை ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் சரி,” சங்கமாதா மற்றும் YSS/SRF இன் மூன்றாவது தலைவரான ஸ்ரீ தயா மாதா, ஒருமுறை கூறினார், “உண்மை என்னவென்றால், நமது இருப்பு ஒவ்வொரு நொடியும் கண்ணுக்குத் தெரியாத தெய்வீக மூலத்திலிருந்து தொடர்ந்து பாயும் உயிரியக்கம் மற்றும் உயிர்சக்தி மற்றும் அறிவாற்றலைப் பொறுத்தது ஆகும்.”

பெரும்பாலும் அழியக்கூடிய, வெளிப்புற தோற்றமாகக் கருதப்படும் அந்த இளமை என்பது “இறைவனின் சாசுவத சக்தி மற்றும் பேரின்பத்துடன் நமது உள்ளார்ந்த தொடர்பை உணர்தலில் பிறக்கும் ஆனந்தத்தைப் உள்ளிருந்து வெளிப்படுத்தும், மனம் மற்றும் சித்தத்தின் உயிர்சக்தி,” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அனைத்து உயிர்களின் மூலத்துடன் தொடர்பு கொள்ள, பரமஹம்ஸரின் ஞானத்தை உள்வாங்கி, அவருடைய எளிய ஆனால் சக்திவாய்ந்த உத்திகளை பயிற்சி செய்வதன் மூலம் இந்த உத்வேகத்தை நீங்கள் மேலும் மேலும் உயிர்ச்சக்தியை அனுபவிக்க பயன்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் எழுத்துக்களில் இருந்து:

ஒரு நகரத்தின் மின்னும் விளக்குகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன என்பதை நீங்கள் மலை உச்சியிலிருந்து பார்க்கும்போது, பல்புகளை ஒளிரச் செய்யும் மின்சாரத்தை வழங்குவது டைனமோ என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். ஆக, மனிதர்களின் பிரகாசிக்கும் உயிர்சக்தியை நீங்கள் காண்கிறீர்கள், ஆனால் அவர்களை உயிர்ப்பிப்பது எது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் ஆன்மீக ரீதியில் குருடர்கள். அந்த சக்தி, கட்புலனாகாவிடினும் மிகவும் தெளிவாக உணரப்படுகிறது. இது எப்போதும் நம் எண்ணங்களுக்குப் பின்னால் கண்ணாமூச்சி விளையாடுகிறது.

வெளிப்புற ஆதாரங்களிலிருந்து (உணவு, ஆக்ஸிஜன் மற்றும் சூரிய ஒளி) பெறப்படும் சக்திகளாலும், மற்றும் அக ஆதாரமாகிய பிரபஞ்ச உணர்வு நிலையிலிருந்து பெறப்படும் உயிர்சக்தியினாலும் (பிராணன்), [உடல்] உயிர்ப்புடன் நடனமாடுகிறது. அக ஆன்ம ஆதாரத்திலிருந்துப் பெறப்படும் உயிர் சக்தி மற்றும் உணர்வுநிலை இன்றி, உடலில் உயிரைத் தக்க வைத்துக் கொள்வதில் உடல் சக்தியின் வெளிப்புற ஆதாரங்கள் பயனற்றவை.

இறைவன் நம்மை, திடப்பொருட்களுள் அடைக்கப்பட்ட சக்தி தேவதைகளாக, உருவாக்கினான் – சதை ஆகிய சடப்பொருள் மின்விளக்கில் பிரகாசிக்கக்கூடிய உயிர் மின்னோட்டங்கள். ஆனால் உடல் மின்விளக்கின் பலவீனங்கள் மற்றும் உடையக்கூடிய தன்மையில் கவனம் செலுத்தி, மாறக்கூடிய சதைக்குள் உள்ள நிரந்தர உயிர் சக்தியின் அழிவற்ற, அழிக்க முடியாத அம்சங்களை எவ்வாறு உணருவது என்பதை நாம் மறந்துவிட்டோம்.

1916 ஆம் ஆண்டில் நான் கண்டறிந்து உருவாக்கிய சக்தியூட்டும் உடற் பயிற்சிகளின் முறையானது, உடலை, உயிர்ப்பூட்டும் பிராணனால் உணர்வுபூர்வமாக நிரப்புவதற்கான மிகவும் பயனுள்ள, எளிமையான மற்றும் கடினமற்ற ஒன்றாகும். திசுக்கள், செல்கள் மற்றும் இரத்தத்தின் இந்த தூண்டுதல் மற்றும் மின்ஊட்டம், நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்க உதவுகிறது.

உங்கள் இரத்தத்தை உயிர்சக்தியுடன் வைத்திருக்க சரியான சுவாசம் மிகவும் முக்கியமானது. இந்த முறையைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்யுங்கள்: முதலில், வலுவான இரட்டை வெளிசுவாசமாக சுவாசத்தை (ஒரு குறுகிய மற்றும் ஒரு நீண்ட மூச்சு) வெளியேற்றுங்கள். பின்னர், இரட்டை உள்சுவாசமாக (ஒரு குறுகிய மற்றும் ஒரு நீண்ட மூச்சு) சுவாசத்தை உள்ளிழுத்து, நுரையீரலை வசதியாக நிரப்பவும். ஆக்ஸிஜன் முழுமையாக உறிஞ்சப்பட்டு பிராணாக மாற்றப்பட ஏதுவாக, நுரையீரலில் காற்றை சில விநாடிகள் தக்க வைத்திருங்கள். பின்னர் இரட்டை வெளிசுவாசம், தொடர்ந்து இரட்டை உள்சுவாசம் மீண்டும் செய்யவும். இந்த முறையை 30 முறை காலையிலும் 30 முறை இரவிலும் சுத்தமான காற்றில் பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் எளிது. இதை நீங்கள் பின்பற்றினால் முன்னெப்போதையும் விட ஆரோக்கியமாக இருப்பீர்கள். இந்த உடற்பயிற்சி கூடுதல் உயிர் சக்தியை அதிக அளவில் கொண்டு வருகிறது; மேலும் உங்கள் இரத்தத்தில் கார்பன் நீக்கம் செய்கிறது, அதிக அமைதியை ஏற்படுத்துகிறது.

உங்களுடைய எல்லா கடமைகளையும் அதிக மகிழ்ச்சியுடன் உங்களகத்தே பொங்கி வரும் துணிவு மிக்க உற்சாகத்துடன் நிறைவேற்ற கற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது உங்களுடைய தினசரி அலுவல்களை நிறைவேற்றும் போது உங்களுடைய உடல் முழுவதிலும் ஒரு உயிர்சக்தியின் வெள்ளம் பொங்கி எழுவதை நீங்கள் உணர்வீர்கள்.

இந்த உயரிய விதிமுறையை சிலர் அறிவார்கள, ஆனால் வெகு சிலரே நடைமுறைப்படுத்துகிறார்கள்: உங்கள் உடல் குறிப்பாக அது பலவீனமாக தோன்றும் நேரங்களில், உயிர் சக்தி நிறைந்ததாக இருக்கிறது என்று இடைவிடாது எண்ணுங்கள். அப்போது உங்கள் மனத்திலிருந்து உடலினுள் வலிமை ஊடுருவிப் பரவுவதை நீங்கள் உணர்வீர்கள் நீங்கள் உணவு, காற்று, சூரிய ஒளி ஆகிய வெளிப்பொருள் சார்ந்த ஆதாரங்கள் தவிர, ஒரு புதிய ரகசிய கட்புலனாகாத சுய உயிர்த்துடிப்பூட்டும் ஆதாரத்தை பெற துவங்குவீர்கள்.

இந்த வாழ்வின் ஆதாரத்தைப் பற்றி நீங்கள் உணர்ந்திருந்தால், அதன் பேணி காக்கும் சக்தியிலிருந்து தொடர்ந்து எவ்வாறு ஈர்க்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள்….. வாழ்க்கையின் இந்த சாரத்தை லட்சக் கணக்கானவர்கள் அறியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் எப்போதும் இறைவனின் சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். ஏன் அந்த சக்தியை பற்றிய உணர்வுடன் இருக்கக் கூடாது?

நீங்கள் இறைவனின் படைப்பாற்றலுள்ள, உயிர் காக்கும் சக்தியுடன் ஊட்டமளிக்கப் பட்டுள்ளீர்கள் என்பதை உணருங்கள். இறைவனின் என்றும் நீடித்திருக்கும் உணர்வு நிலையானது, கடந்தகாலத் தோல்விகள், பயம், நோய், முதுமை ஆகிய அழியும் மனித உணர்வுநிலையை அழித்துவிட்டு உங்கள் உடலில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என உணரவும். இந்த எண்ணத்தை ஆழ்ந்த கவனத்துடன் திரும்பக் கூறவும்: “எந்தையே, நீ எனது உடலில், எனது மனத்தில், எனது ஆன்மாவில் உள்ளாய். நான் உனது பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளேன். உனது என்றும் நீடித்திருக்கும் இளமை, சக்தி, அமரத்துவம் மற்றும் ஆனந்தத்துடன் என் உடல், மனம் மற்றும் ஆன்மா ஒளிரும்படியாக அருள்புரிவாய்.”

உங்கள் வாழ்க்கையை எவ்வாறு அதிக ஆற்றலால் நிரப்புவது என்பதைப் பற்றியும், பரமஹம்ஸர் மேலே குறிப்பிட்டுள்ள சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் முறையைப் பற்றியும் மேலும் அறிய, தெய்வீகக் காதல் புத்தகத்திலிருந்து சில பகுதிகளான “உயிர்வீரியத்தின் ரகசியம்” ஐ படிக்க உங்களை அழைக்கிறோம்.

இதைப் பகிர